Published : 22 Jun 2018 07:43 AM
Last Updated : 22 Jun 2018 07:43 AM
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், நேற்று அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகத்துடன் ஆனித் திருமஞ்சன தரிசனம் தொடங்கியது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது.
இதைத் தொடர்ந்து, ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜமூர்த்தி சுவாமி திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் வைபவம் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்தது. பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வந்த பின்னர் பிற்பகல் 3.15 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து ஸ்ரீநடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் நடனம் ஆடியபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தபடியே சித்சபை பிரவேசமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி, திருநாளைப்போவார் என்கிற ஸ்ரீ நந்தனார் பட ஊர்வலம் நடந்தது. நந்தனார் கல்விக்கழகத்தினர், நந்தனார் மட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT