Published : 22 Jun 2018 07:43 AM
Last Updated : 22 Jun 2018 07:43 AM

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு: விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைக்கு நில அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இத்திட்டத்துக்காக தருமபுரி மாவட்டத்தில் 1846 விவசாயிகளிடம் இருந்து 439 ஹெக்டேர் விளைநிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, வேடகட்டமடுவு, தீர்த்தமலை, பாளையம், வீரப்பநாயக்கன்பட்டி, எம்.தாதம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, சுமைதாங்கிமேடு, அச்சல்வாடி, பேதாதம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் நில அளவைப் பணி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த இருளப்பட்டியில் நேற்று காலை 6 மணி அளவில் நிலத்தை அளவீடு செய்து கல் நடும் பணிகளை அதிகாரிகள் தொடங்கினர். இதற்கு, அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரகுமார் என்பவர் தனது விளைநிலத்தில் கருப்புக் கொடி நட்டு வைத்து அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனைப் பொருட்படுத்தாமல் போலீஸாருடன் வந்த அலுவலர்கள், நிலத்தை அளவிட்டு கற்களை நட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரகுமார், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மனோகரன், வேலன் ஆகியோர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக தெரிவித்தனர்.

அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், 3 விவசாயிகளின் நிலத்தை அளவீடு செய்யாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவுக்குப் பின்னர் அளவீடு செய்யும் பணிகளை தொடங்கினர். அரூர் டிஎஸ்பி செல்லபாண்டியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார், நில அளவீட்டுப் பணியின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கதறி அழுத பெண்கள்

சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி, ராமலிங்கபுரம், ஏரிக்கரை பகுதியில் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று காலை நில அளவீடு பணியில் ஈடுபட்டனர்.

ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாய குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கதறி அழுதனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர், நில அளவீடு பணி தொடர்ந்தது.

மின்னாம்பள்ளி, ராமலிங்கபுரம் பகுதியில் குடியிருப்புகள் அதிகளவு உள்ளன. பசுமை வழிச்சாலைக்காக பல வீடுகள், அளவீடு குறியீட்டுக்குள் வருவதால், வீடுகளை இழக்கும் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பசுமை வழிச்சாலைக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x