Published : 22 Jun 2018 07:43 AM
Last Updated : 22 Jun 2018 07:43 AM

27-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு: லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்- இன்று முதல் லாரிகள் வழக்கம்போல் ஓடும்

லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு வரும் 27-ம் தேதிக்கு அழைப்பு விடுத்துள்ளதால், 4 நாட்களாக நடந்து வந்த வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.

டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்வதை நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலை யைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீட்டுத் தொகையை, தொடர்ந்து உயர்த்தி வருவதை ரத்து செய்ய வேண்டும், சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18-ம் தேதி முதல் லாரி உரிமையாளர் கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

40 சதவீதம் ஓடவில்லை

இதனால், நாடுமுழுவதும் 4-வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் லாரிகள் நிறுத்தப்பட்டன. ஒட்டுமொத்த லாரிகளில் 40 சதவீதம் ஓடவில்லை. இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து லாரி உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பெங்களூரில் நேற்று நடந்தது. இதற்கிடையே, லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதால், வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.சுகுமார் கூறியதாவது:

டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உட்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். எங்களின் போராட்டத்தால், நாடுமுழுவதும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.

ரூ.200 கோடி இழப்பு

கடந்த 4 நாட்களில் தமிழக லாரி உரிமையாளர்களுக்கு மட் டும் சுமார் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, எங்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வரும் 27-ம் தேதிக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனவே, அவரின் கோரிக்கையை ஏற்று, எங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளோம்.

இன்று முதல் சரக்கு லாரிகள் வழக்கம்போல் ஓடும். மத்திய அரசிடம் எங்களது கோரிக்கைகள் குறித்து விரிவாகப் பேசுவோம். லாரி உரிமையாளர்கள் மட்டுமல்ல, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் படும் அவதிகளையும் எடுத்துரைப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x