Published : 10 Jun 2018 11:17 AM
Last Updated : 10 Jun 2018 11:17 AM

சென்னை வேளச்சேரியில் துணிகரம்: வெளியூர் சென்றிருந்தவர் வீட்டுப் பூட்டை உடைத்துக் கொள்ளை

சென்னை வேளச்சேரியில் வெளியூர் சென்றிருந்தவர் ஒருவரின் வீட்டை உடைத்து துணிகரக்கொள்ளை நடந்துள்ளது.

வேளச்சேரி சீதாபதி நகரைச் சேர்ந்தவர் இளங்கேஸ்வரன் (47), இவருடைய தம்பி மகேஸ்வரன் ஆகியோர் கட்டுமானத் தொழில், பல்பொருள் விற்பனையகம் ஆகிய தொழில்களைச் செய்து வந்தனர்.

இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளனர். அப்போது நேற்று காலை இளங்கேஸ்வரன் வீட்டுப் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டினர் வேளச்சேரி போலீஸுக்குப் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது இளங்கேஸ்வரன் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருப்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, 200 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுபற்றி வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுபற்றி சிவகங்கை சென்று உள்ள இளங்கேஸ்வரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் சென்னை திரும்பி வந்து கொண்டு இருக்கிறார். அவர் இங்கு வந்த பிறகுதான் உண்மையில் அவரது வீட்டில் எவ்வளவு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என்ற முழுவிவரமும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x