Published : 10 Jun 2018 09:45 AM
Last Updated : 10 Jun 2018 09:45 AM

ரயில் பெட்டிகளின் இடத்தைக் காட்டும் தகவல் பலகை இல்லாததால் எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 5, 6 மற்றும் 7-வது நடைமேடையில் ரயில் பெட்டிகளின் இடத்தைக் காட்டும் தகவல் பலகை இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் விளங்குகிறது. தமிழகத்தின் பல முக்கிய நகரங்களுக்கும் இங்கிருந்து விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் எழும்பூர் வழியாக பல்வேறு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இங்கு பயணிகளுக்கான வசதிகள் போதிய அளவில் செய்யப்படாமல் உள்ளன. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

தூய்மையாக இல்லை

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “சென்ட்ரலுக்கு அடுத்தபடியாக எழும்பூர் முக்கிய ரயில் நிலையமாக இருக்கிறது. ஆனால், இங்கு போதிய அளவில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தாமல் இருக்கின்றன. நடைமேடைகள் தூய்மையாக இல்லை, சில இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல், 5, 6, 7 நடைமேடைகளில் ரயில் பெட்டிகளின் இடத்தைக் காட்டும் தகவல் பலகை இல்லை. இதனால், ரயில்கள் வந்த பிறகு நீண்ட தூரம் நடந்து சென்று தமக்கு உரிய பெட்டியைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. வெளியூரில் இருந்து எழும்பூர் வழியாகச் செல்லும் சில ரயில்கள் 10 நிமிடங்களே நிற்கின்றன.

இதனால், பயணிகள் கடைசி நேரத்தில் பெட்டிகளைக் கண்டுபிடித்து ஏறுவதற்கு சிரமப்படுகின்றனர். எனவே, ரயில் பெட்டிகளை அடையாளம் காணும் வகையில் டிஜிட்டல் பலகை அமைக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x