Published : 02 Jun 2018 08:00 PM
Last Updated : 02 Jun 2018 08:00 PM

மன உளைச்சல் காரணமாக பெண் போலீஸ் உள்ளிட்ட 3 காவலர்கள் தற்கொலை

திருவள்ளூர், திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மன உளைச்சல் காரணமாக பெண் போலீஸ் உட்பட மூன்று காவலர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

சென்னை அருகே மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தில், காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவள்ளூரில் துப்பாக்கியால் சுட்டு சிஆர்பிஎப் காவலர் தற்கொலை:

ஹரியாணாவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், பூந்தமல்லியில் மத்திய ரிசர்வ் போலீஸ்(சிஆர்பிஎப்) பயிற்சி மையம் உள்ளது. இங்கு காவலராக இருந்தவர் ராஜேஷ்குமார் (40). இன்று காலை அவர் தான் தங்கியிருந்த கூடாரத்தில், பாதுகாப்புக்கு வைத்திருந்த எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கியால் தன்னைத்தானே கழுத்தில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஷ்குமாரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து பூநதமல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராஜேஷ்குமார் பிணத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜேஷ்குமார் பணியின்போது செல்போன் பேசியுள்ளார். இதை அறிந்த மேலதிகாரி அவருக்கு பலர் முன் கண்டித்ததோடு தண்டனையும் வழங்கி இருக்கிறார். இதை அவமானமாகக் கருதி ராஜேஷ்குமார் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஓசூரில் பெண் காவலர் தற்கொலை:

ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தவர் காந்திமதி (35). இவரது கணவர் முருகன் (39).  ஓசூரில் பணியாற்றிய காந்திமதி அங்கேயே தங்கிவிடுவாராம். வாரவிடுமுறை நாட்கள் மட்டும் கிருஷ்ணகிரி காவலர் குடியிருப்பிலுள்ள தனது வீட்டிற்கு வந்து தங்கிச் செல்வதுண்டாம்.

காந்திமதிக்கும் அவரது கணவர் முருகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனாலேயே அவர் வீட்டுக்கு வருவதே வாரத்தில் ஒருநாள் தான் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் நேற்று விடுமுறைக்கு வந்தவர், காலையில் கணவர் முருகன் வெளியில் சென்றிருந்த போது காந்திமதி, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி போலீஸார் கணவர் முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் ஆயுதப்படை காவலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருப்பூர் மாநகர ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்தவர் மோகன் (27). தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  இவருக்குத் திருமணமாகி மூன்று மாதத்தில் ஒரு கைக்குழந்தை உள்ளது. இவர் ஊருக்குச் சென்று கைக்குழந்தையை பார்க்க விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு மேலதிகாரிகள் லீவு தரவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் இன்று திருப்பூர் வஞ்சிபாளையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். தமிழகத்தில் வேலைப்பளு, அதிகாரிகள் டார்ச்சர், மன உளைச்சல் காரணமாக காவலர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க நீண்ட கால கவுன்சிலிங், பிரச்சினைகளை அதிகாரிகள் மனிதாபிமானத்தோடு அணுகுவது மிக அவசியம் என்பதே காவலர்களின் கருத்தாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x