Published : 02 Jun 2018 06:27 PM
Last Updated : 02 Jun 2018 06:27 PM

திருமண நாளில் மனைவிக்கு மரணத்தைப் பரிசளித்த கணவன்: பட்டாபிராமில் பரிதாபம்

பட்டாபிராமில் மனைவியுடன் ஏற்பட்ட தொடர் குடும்பத் தகராறில் முதலாமாண்டு திருமண நாளைக் கொண்டாடவிருந்த மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன் தானும் கழுத்தை அறுத்து தற்கொலை முயன்றார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (24). இவரும் பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த மதுமிதா (22) என்பவரும் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே காதலித்தனர். மதுமிதா பிரபல தனியார் வங்கியில் நல்ல வேலையில் சேர்ந்தார். வெங்கடேசன் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.

வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்த இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தின்போது மதுமிதாவுக்கு பெற்றோர் 35 சவரன் நகையை வரதட்சணையாகக் கொடுத்து திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்குப் பின்னர் அம்பத்தூரில் இருவரும் தனியாக வசித்தனர்.

வெங்கடேசன் காதலித்த காலத்தில் தனது சுயரூபத்தைக் காட்டாதவர் திருமணத்திற்கு பின்னர் தனது உண்மை முகத்தை வெளிக்காட்டத் தொடங்கினார். எதற்கெடுத்தாலும் மதுமிதாவுடன் சண்டைபோட்டு அவரைக் கடுமையாகத் தாக்கி வந்தார். இதனால் திருமண வாழ்வு சில மாதங்களிலேயே கசந்தது.

கிட்டத்தட்ட சைக்கோ போல் நடந்துகொண்ட வெங்கடேசனைப் பற்றி தனது பெற்றோரிடம் மதுமிதா கூறியுள்ளார். சாதாரண சண்டைதானே போகப்போக எல்லாம் சரியாகிவிடும் என்று பெற்றோர் நினைத்திருந்த வேலையில் வெங்கடேசனின் கொடுமை அதிகமாகியதால் பஞ்சாயத்து பேசி பட்டாபிராமிலேயே வீடு பிடித்து குடிவைத்தனர் பெற்றோர்.

இதனிடையே வெங்கடேசனும் மதுமிதாவும் வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். அதற்காக மதுமிதா 32 சவரன் நகையை விற்றுப் பணம் கொடுத்துள்ளார். ஆனாலும் மேலும் 7 லட்சம் தேவைப்பட்டதால் மதுமிதாவின் பெற்றோரிடம் பணம் வாங்கித்தர வெங்கடேசன் வறுபுறுத்தி உள்ளார்.

இதனால் ஏற்பட்ட தகறாரில் அடிக்கடி மதுமிதாவைக் கண்டபடி வெங்கடேசன் தாக்க, அடிதாளாமல் கடந்த மே மாதம் ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மதுமிதா கணவர் மீது புகார் அளித்துள்ளார். போலீஸ் ஸ்டேஷனில் சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் ஒரு வாரத்தில் தனது சுயரூபத்தைக் காட்டிய வெங்கடேசன் மீண்டும் சண்டையிட்டு கடுமையாகத் தாக்க தனது பெற்றோர் வீட்டுக்குப் போய்விட்டார் மதுமிதா. நேற்று முன் தினம் தனது மாமனாருடன் போனில் பேசிய வெங்கடேசன் 'முதலாமாண்டு திருமணம் வருகிறது, நான் திருந்திவிட்டேன் மதுமிதாவை அனுப்பி வையுங்கள்' என்று கெஞ்சியுள்ளார்.

இதை நம்பி நேற்று மதுமிதாவை அனுப்பி வைத்துள்ளனர். காலை 9 மணிக்கு வீட்டுக்கு வந்த மதுமிதாவுடன் மீண்டும் வெங்கடேசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடுமையான ஆத்திரத்தில் இருந்த வெங்கடேசன் வீட்டிலிருந்த கத்தியால் மதுமிதாவை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

இதில் வயிற்றில் 3 குத்தும், மார்பில், இடுப்பில் ஒரு குத்தும் விழுந்துள்ளது. பின்னர் தன்னையும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டார். அவர்கள் சண்டையிட்டு மதுமிதா அலறும் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தவர் மதுமிதா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து போலீஸுக்கும், மதுமிதாவின் வீட்டுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக அங்கு வந்த மதுமிதாவின் சகோதரர்கள் தங்கை ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல போலீஸார் உதவியை நாடியுள்ளனர். ஆனால் போலீஸார் எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.

இதனால் தங்களது இருசக்கர வாகனத்திலேயே மதுமிதாவை ஏற்ற முயல இருமுறை வாகனத்திலிருந்து மதுமிதா கீழே விழுந்துள்ளார்.

பின்னர் ஒரு ஆட்டோவைப் பிடித்து ஆவடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று மோசமாக இருக்கவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லும் வழியிலேயே மதுமிதா உயிரிழந்தார்.

கணவர் வெங்கடேசன் காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணமாகி ஒரு வருடம் கூட மனைவியுடன் வாழாமல், பண ஆசையால் சண்டையிட்டு அடித்து உதைத்த கணவன், கடைசியில் மனைவிக்கு மணநாளில் மரணத்தைப் பரிசாக அளித்துள்ளார்.

மணநாளிலேயே மகளுக்கு ஈமச்சடங்கு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதே என்று மதுமிதாவின் குடும்பமே கதறி அழுதது அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x