Published : 02 Jun 2018 02:55 PM
Last Updated : 02 Jun 2018 02:55 PM
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட, தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நுங்கம்பாக்கத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட, தென் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக குளச்சல், தக்கலையில் 7 செ.மீ. மழையும், காஞ்சிபுரத்தில் 5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி வரை கடல் அலைகள் உயர்ந்து காணப்படும். கொளச்சலில் இருந்து கீழக்கரை, அதனை ஒட்டியுள்ள தென் தமிழகப் பகுதிகளில் 3.0 மீ முதல் 3.4 மீ வரை அலைகள் உயர்ந்து காணப்படும். அதனால் தென் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குச் செல்ல வேண்டும்” என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT