Published : 02 Jun 2018 02:09 PM
Last Updated : 02 Jun 2018 02:09 PM

தமிழ்நாட்டில் பயங்கரவாத சக்திகள் வளர்ந்துள்ளன: ஆளுநர் சந்திப்புக்குப் பிறகு சுப்பிரமணியன் சுவாமி பேட்டி

போராட்டங்களால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்ற ரஜினிகாந்தின் கருத்து குறித்து தான் தற்போதைக்கு ஏதும் தெரிவிக்க முடியாது என, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்  சுவாமி இன்று (சனிக்கிழமை) கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சென்று பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துப் பேசினார்.

அதன்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி, “தமிழ்நாட்டில் பயங்கரவாத சக்திகள் வளர்ந்துள்ளன. அதுகுறித்து எனக்கு டெல்லியில் கிடைத்த தகவல்களை ஆளுநருடன் பகிர்ந்து கொண்டேன்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நக்சலைட்டுகள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ மிஷனரிகளைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் வன்முறையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்டம், கூடங்குளம் அணு உலை போராட்டம் ஆகியவற்றில் அவர்களின் தலையீடு இருந்தது. ஆனால், ஸ்டெர்லைட் போராட்டத்தில் இவர்களின் தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரணை கமிஷன் தான் கூற முடியும். விசாரணை கமிஷன் அறிக்கை வரும் வரை அதுகுறித்து நான் எதுவும் கருத்து தெரிவிக்க முடியாது.

குறிப்பிட்ட பிரச்சினைகளில் சினிமா நடிகர்களின் கருத்துகள் மாறும். அரசியலுக்கு வரும் நடிகர்களின் செயல்பாடுகள் குறித்து ஓராண்டு கழித்து தான் கூற முடியும். போராட்டங்களால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்ற ரஜினிகாந்தின் கருத்து குறித்து நான் இப்போது ஏதும் தெரிவிக்க முடியாது. ரஜினி இப்போது ஒன்றைச் சொல்லிவிட்டு பின்பு அதுகுறித்து வேறொரு கருத்தைத் தெரிவிக்கலாம். அதனால், பொறுத்திருந்து தான் கருத்து கூற முடியும்” என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x