Published : 02 Jun 2018 11:56 AM
Last Updated : 02 Jun 2018 11:56 AM

அரசுக்கு வருவாய்; மக்களுக்கு விலை உயர்வா? - சமையல் கேஸ் விலை உயர்வுக்கு விஜயகாந்த் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், விலை உயர்வை திரும்பபெறவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் 81.28 ரூபாய்க்கும், டீசல் 73.06 ரூபாய்க்கும், மானியத்துடன் கூடிய வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.2.12 காசுகள் உயர்த்தி, 481.84 ரூபாயாகவும், மானியம் இல்லாத வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.49.50 காசுகள் உயர்த்தப்பட்டு, 712 ரூபாயாகவும் உள்ளது.

எனவே இந்த விலை ஏற்றம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. நடுத்தர மற்றும் சாமானிய பொதுமக்கள் இந்த விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது வேதனையாக உள்ளது.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பால், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் என வீட்டிற்கு தேவையான அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன. ஒவ்வொரு சாமானியரும் பெட்ரோல், டீசலுக்காக பெட்ரோல் நிலையங்களுக்கு செல்லும் போது மத்திய, மாநில அரசுகளை திட்டும் நிலை உருவாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கேரள மாநிலம் ஒரு ரூபாய் குறைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் புதுச்சேரியிலும் விலை உயர்வை குறைப்பதற்காக ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இதை மிக முக்கிய பிரச்சினையாக எடுத்துக்கொண்டு, விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகாமல், கஷ்டப்படும் சாமானிய மக்களுக்கு இந்த அரசு துணையாக இருந்து, பெட்ரோல், டீசல், மற்றும் சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில்கள், நெசவுத் தொழில்கள் மற்றும் அனைத்து வியாபாரங்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்திற்கு வேண்டுமானால் ஒரு லட்சம் கோடி வருமானம் ஜிஎஸ்டியால் வந்திருக்கலாம், ஆனால் மக்களுக்கு இதனால் எந்த விதத்திலும் பலன் இல்லை. ‘உரலுக்கு ஒரு புறம் இடி என்றால், மத்தளத்துக்கு இரு புறம் இடி என்பது போல’ ஜிஎஸ்டி மற்றும் விலைவாசி உயர்வுகளால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆகவே இந்த பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x