Published : 02 Jun 2018 11:11 AM
Last Updated : 02 Jun 2018 11:11 AM

கோவையில் ரூ.2000 நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டவர் கைது: ரூ.84 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்

கோவையில் 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கோவை கோவில்மேடு மருதக்கோனார் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் மீது இருசக்கர வாகன திருட்டு சம்பந்தமாக வழக்குகள் பல உள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சாய்பாபா காலனியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்திடம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஆனந்தனிடம் இருந்து நான்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து விசாரித்துள்ளனர். அந்த நோட்டுகள் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எடுத்துள்ளதை அடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், ஆனந்த் காவல் துறையிடம் தனியார் நிதி நிறுவனத்தில் தற்போது கலெக்‌ஷன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரது நண்பர் சுந்தர் என்பவர் வேலாண்டிபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளார்.

அங்கு வைத்து கடந்த ஒன்றரை மாதமாக 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது. காவல்துறையினர் சோதனை செய்ததில் கலர் ஜெராக்ஸ் எடுக்கும் இயந்திரம் மற்றும் அங்கு இருந்த 42 கட்டுகள் கொண்ட 84 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து கள்ள நோட்டு தடுப்பு பிரிவினர் ஆனந்தனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்தனுக்கு உதவியதாக காரமடை, சுந்தர் ஆகிய இருவரையும் சாய்பாபா காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x