Published : 02 Jun 2018 09:51 AM
Last Updated : 02 Jun 2018 09:51 AM
சட்டப்பேரவையில் பால்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும், அறிவிப்புகளை வெளியிட்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:
தமிழகத்தில் தினமும் 30.67 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 22.08 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக கடந்த மார்ச் 28-ம் தேதி சென்னையில் 12.63 லட்சம் லிட்டர் பால் விற்பனையானது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மலேசியா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், கத்தார், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா, இலங்கை, ஓமன், ஆப்பிரிக்கா, வியட்நாம், சீனா, கம்போடியா, மொரீஷியஸ் ஆகிய 15 நாடுகளுக்கு பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும்.
சென்னையில் முதல்கட்டமாக 3 இடங்களில் ‘ஆவின் உடனடி காபி’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். ஆவின் விற்பனை வருவாய் தற்போது ரூ.5,478 கோடியாக உள்ளது.
ஆவின் மூலம் 30 வகையான பால் பொருட்கள், 80 வகையான ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சர்க்கரை இல்லாத குல்பி ஐஸ்கிரீம், வெண்ணிலா ஐஸ்கிரீம், பனீர் அரை கிலோ, ஒரு கிலோ, கலவை சாக்லேட், ஐஸ்கிரீம், கலவை ஸ்பெஷல் ஐஸ்கிரீம், தயிர் 400 கிராம் கப் போன்ற பால் பொருட்கள் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி முதல் விற்கப்படுகின்றன.
பால் பண்ணைத் தொழில் பற்றிய நவீன தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொள்ள 30 முன்னணி பால் உற்பத்தியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
விருதுநகர் ஒன்றியத்தில் வெண்ணெய், நெய், பனீர் மற்றும் இந்திய வகை இனிப்புகள் தயாரிக்க பால் பொருட்கள் தயாரிக்கும் புதிய ஆலை ரூ.10 கோடியில் நிறுவப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT