Published : 02 Jun 2018 09:45 AM
Last Updated : 02 Jun 2018 09:45 AM

செங்கல்பட்டு அருகே எரித்து கொல்லப்பட்டவர் கேரள மாணவியா?: போலீஸ் விசாரணை தீவிரம்

செங்கல்பட்டு அருகே எரித்துக் கொலை செய்யப்பட்டவர் கேரளத்தில் காணாமல்போன மாணவியா என்ற சந்தேகம் செங்கல்பட்டு போலீஸாருக்கு வலுத்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்த கேரள போலீஸார் செங்கல்பட்டு வர உள்ளனர்.

கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜேஸ்னா மரியா ஜேம்ஸ்(20). இவர் கேரள மாநிலம் காஞ்சிரப்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த மார்ச் 22-ம் தேதி ஜேஸ்னா மாயமானார். இது தொடர்பாக பத்தனம்திட்டா போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜேஸ்னாவைத் தேடி வந்தனர்.

இந்த வழக்கில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில் காணாமல் போன கல்லூரி மாணவி ஜேஸ்னா பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்தது.

இதற்கிடையில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பழவேலி பகுதியில், பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்ததை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் காணாமல்போன கல்லூரிப் பெண் ஜேஸ்னாவின் வயது, உயரம், எடை உடலில் குறிப்பிட்ட சில அடையாளங்கள் இந்தப் பெண்ணின் உடலோடு ஒத்துப்போவதால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு போலீஸார் கேரள போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்த கேரள போலீஸார் செங்கல்பட்டு விரைந்துள்ளனர். கேரளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் கல்லூரிப் பெண் காணாமல்போன வழக்கில் இதனால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கேரள போலீஸாரின் விசாரணைக்குப் பின் இங்குக் கொலை செய்யப்பட்டவர் ஜேஸ்னாதானா? அல்லது வேறு நபரா என்பது குறித்து தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x