Published : 02 Jun 2018 08:20 AM
Last Updated : 02 Jun 2018 08:20 AM

இருநாட்டு நட்புறவுக்கு சிறந்த உதாரணமாக இலங்கைக்கு இந்தியா வழங்கிய 297 ஆம்புலன்ஸ்கள்: கூடுதலாக ரூ. 109 கோடி நிதி வழங்க முடிவு

இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் மட்டும் இயங்கி வந்த இந்தியா வழங்கிய ஆம்புலன்ஸ்கள் விரைவில் இலங்கை முழுவதும் இயக்கப்பட உள்ளன. இதற்காக, இந்திய அரசு கூடுதலாக ரூ. 109 கோடி நிதி வழங்குகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக இலங்கைக்கு அரசு முறை பயணம் சென்றார். அப்போது, இந்தியாவில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையை இலங்கையிலும் அமல்படுத்த உறுதி அளித்தார்.

இதன் அடிப்படையில் இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு இரு தவணைகளாக ரூ.147.81 கோடி (இந்திய ரூபாய் மதிப்பில்) நிதியுதவியில் 297 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர், முதல் உதவி நிபுணர்கள் என அந்நாட்டு ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கியது.

இந்த ஆம்புலன்ஸ் சேவை இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் மட்டும் முதற்கட்டமாக பயன்பாட்டுக்கு, அந்நாட்டு சுகாதார அமைச்சகம் மூலம் “சுவசெரிய” ஆம்புலன்ஸ் சேவை என்ற பெயரில் இயக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் அழைப்புக்காக 1900 என்ற இலவச தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டு இயங்கி வருகிறது.

பெரும் வரவேற்பை இத்திட்டம் பெற்றதால் இலங்கை முழுவதும் ‘சுவசெரிய 1900 இலவச ஆம்புலன்ஸ்’ சேவையை விரிவுப்படுத்த மக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்காக இந்திய அரசு இலங்கைக்கு மேலும் ரூ. 109 கோடி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த மே 31-ம் தேதி இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய நிதி உதவியை பெற்று 1900 ஆம்புலன்ஸ்கள் இலங்கை முழுவதும் இயக்குவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தார். இதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் இலங்கைக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x