Published : 02 Jun 2018 08:00 AM
Last Updated : 02 Jun 2018 08:00 AM

ஜூன் 7-க்கு பிறகு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

ஜூன் 7-ம் தேதிக்கு பிறகு, வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்ப தாவது:

தென்மேற்கு பருவக் காற்றால் ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தின் உள் பகுதியில் மழைப் பொழிவு அதிகமாவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. முதல் வாரத்தில் தென்னிந்திய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. 2-வது வாரத்தில் நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை அதிகரிக்கக்கூடும்.

இந்த மழை காரணமாக 2-வது வாரத்தில் வெப்பநிலை வெகு வாக குறையக்கூடும். மேலும், வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஜூன் 7-ம் தேதிக்கு மேல் 11-ம் தேதிக்குள்ளாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருப்பது தோராயமான கணிப்புதான். ஒருவேளை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாமலும் போகலாம். அது குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்படும்.

வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. அதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும். வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி, அதிகபட்சமாக திருத்தணியில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x