Published : 01 Jun 2018 06:15 PM
Last Updated : 01 Jun 2018 06:15 PM

நாங்களும் ரெடி; ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்து ஒரு நாள் முழுவதும் சட்டப்பேரவையில் விவாதிக்க நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா என்று ஸ்டாலின் சவால் விடுத்தார். நாள் முழுவதும் அல்ல ஒரு ஆண்டு முழுவதும் கூட விவாதிக்கத் தயார், நாங்களும் ரெடி என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் கூறியுள்ளார்.

ஸ்டாலின் தன் முகநூலில் வெளியிட்ட பதிவில், ''தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றியே குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக விளக்கம் அளித்ததுபோல், ஸ்டெர்லைட் ஆலை குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளாமலேயே, அரைகுறையாக அவையில் முதல்வர் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்.

அமைச்சரவை முடிவின்படி வெளியிடப்படும் அரசு ஆணை பற்றியும், ஸ்டெர்லைட் ஆலை தொடங்குகுவதற்கு யார் காரணம் என்பது பற்றியும், சட்டப்பேரவையில் நாள் முழுவதும் விவாதிக்க, திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நானும் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். “நாங்க ரெடி; முதல்வர் ரெடியா?” என்பதை உடனே வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்'' என்று சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். சட்டப்பேரவையில் தனது துறைகளுக்கான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு, ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதாக தெரிவித்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது குறித்து, சட்டப்பேரவையில் நாள் முழுவதும் விவாதிக்க முதல்வர் தயாரா என மு.க.ஸ்டாலின் சவால் விட்டுள்ளாரே செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ''நாள் முழுவதும் அல்ல ஆண்டு முழுவதும்கூட விவாதிக்கத் தயார்'' என்று பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x