Published : 01 Jun 2018 11:10 AM
Last Updated : 01 Jun 2018 11:10 AM

வேல்முருகன் கைதை கண்டித்து ஜூன் 5-ம் தேதி ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனை தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, வரும் ஜூன் 5-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சுங்கச் சாவடியை உடைத்த வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடந்த 25-ம் தேதி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்பு உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நெய்வேலி தெர்மல் காவல் நிலைய போலீஸார் அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்தனர்.

என்எல்சி நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது அவர் பேசிய பேச்சுகள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாகக் கூறப்பட்டது. ஸ்டான்லி மருத்துவ்சமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து புழல் மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர்களைக் காணச் சென்றபோது கைது செய்யப்பட்டு உணவும் தண்ணீரும் அருந்த விடாமல் 24 மணி நேரத்திற்குப் பின்னர் திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

மனிதாபிமானமின்றி நடத்தப்பட்டதால், அவர் உணவும் தண்ணீரும் அருந்தாமல் புழல் மத்திய சிறையில் அறப்போர் நடத்திய நிலையில், நான் அவரைச் சந்தித்து சிறுநீரகங்கள் பாதித்து உடல்நலம் பாழாகிவிடும் என எடுத்துக்கூறி உணவருந்தச் செய்தேன்.

அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த 30 ஆம் தேதி மாலையில் தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் இந்திய குற்றவியல் சட்டத்தின் கடுமையான பிரிவுகளில் தமிழக காவல்துறை அவர் மீது வழக்குப் போட்டுள்ளது.

மனிதாபிமானமின்றி மீண்டும் வியாழக்கிழமை புழல் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அவரை அடைத்துவிட்டனர். தமிழக அரசின் பாசிசப் போக்கையும், காவல்துறையின் அடக்குமுறையையும் கண்டித்து ஜூன் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், மதிமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கழகத் தோழர்களும், தோழமைக் கட்சியினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் பெருந்திரளாக இந்த அறப்போரில் கலந்துகொள்ள வேண்டுகிறேன்” என வைகோ வலியுறூத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x