Published : 01 Jun 2018 10:25 AM
Last Updated : 01 Jun 2018 10:25 AM

கருணாநிதி, கனிமொழி குறித்து அவதூறு கருத்து: ஹெச்.ராஜா மீதான புகாருக்கு முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம்; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழி ஆகியோர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது கூறப்படும் புகாரில், உரிய முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி, அவரது மகள் கனிமொழி எம்.பி. குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடந்த ஏப்ரல் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் நலச் சங்கத் தலைவரான குகேஷ் என்பவர், சென்னை நொளம்பூர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி புகார் அளித்தார்.

இந்நிலையில், தான் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் குகேஷ் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ‘‘ஹெச்.ராஜாவுக்கு எதிரான புகார் மீது உரிய முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம். அந்தப் புகாரில் உரிய முகாந்திரம் இல்லை என்றால் மனுவை முடித்துவைத்து உத்தரவிட வேண்டும்’’ என்று நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x