Published : 01 Jun 2018 10:17 AM
Last Updated : 01 Jun 2018 10:17 AM
பைனான்ஸ் அதிபரைக் கடத்தி ரூ.33 லட்சம் மற்றும் 28 பவுன் வழிப்பறி செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பைனான்ஸ் அதிபர் மோகன் (49). இவருக்கு சரவணகுமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார். தான் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் தனியார் நிறுவனம் நடத்துவதாகவும், அதை விரிவாக்கம் செய்ய பணம் தேவைப்படுவதாகவும் ரூ.20 லட்சம் கடனாக தரவேண்டும் எனவும் மோகனிடம் சரவணகுமார் கேட்டுள்ளார்.
சரவணகுமாருக்கு கடன் கொடுக்கும் முன் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை காண மோகன் காரில் புறப்பட்டுள்ளார். அவரை சரவணகுமார் தனது கூட்டாளியுடன் அதே காரில் கடந்த 23-ம் தேதி கடத்தியுள்ளார். அவர்களின் அச்சுறுத்தலால் பயந்துபோன மோகன், தனது சகோதரருக்கு போனில் தகவல் தெரிவித்து அவர் மூலம் ரூ.33.20 லட்சத்தை கோயம்பேட்டில் வைத்துக் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த கும்பல் மோகனின் 28 பவுன் நகையையும் பறித்துச் சென்றுள்ளது.
இதுபற்றிய தகவலறிந்து வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் சந்துரு தலைமையிலான போலீஸார் எம்எம்டிஏ பகுதியைச் சேர்ந்த நந்தகுமார், ஷேக்தாவூத், மதுரவாயல் சீனிவாசன், சுதிர்குமார், செல்வபாண்டி ஆகிய 5 பேரைக் கைது செய்தனர். அவர்களின் கூட்டாளிகளான எம்எம்டிஏ வினோத், மணி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சரவணகுமாரை போலீஸார் தேடுகின்றனர். இவரது உண்மையான பெயர் கிருஷ்ணராஜ் என்றும், இவர் அம்பத்தூரைச் சேர்ந்தவர் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT