Published : 01 Jun 2018 10:07 AM
Last Updated : 01 Jun 2018 10:07 AM

தென்மேற்கு பருவக் காற்றால் தமிழகத்தின் உள் பகுதியில் மழை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:

தமிழகத்தின் உள் பகுதி வரை தென்மேற்கு பருவக் காற்று பரவியுள்ளது. ஏறத்தாழ ஜுன் முதல் வாரத்தில் தென் மாநிலங்களின் இதரப் பகுதிகள் முழுவதும் வடகிழக்கு பருவக் காற்று பரவ வாய்ப்புள்ளது. அதன் காரணமாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. அதன் விளைவாக தமிழகத்தின் உள் பகுதி, ஆந்திரா, தெலங்கானா பகுதிகளில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வெப்பம் அதிகரிக்கும்

அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான அல்லது இடியுடன் மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம், நீலகிரி ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு பாலசந்திரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x