Published : 01 Jun 2018 07:59 AM
Last Updated : 01 Jun 2018 07:59 AM

திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வரலாம்

திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வர தடை எதுவும் இல்லை என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய காங்கிரஸ் கொறடா எஸ்.விஜயதரணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபூபக்கர், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் ஆகியோர், ‘‘பிரதான எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்களை சட்டப்பேரவைக்கு வரு மாறு முதல்வரும், பேரவைத் தலைவரும் அழைக்க வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத் தனர்.

அதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக கடந்த 29-ம் தேதி முதல்வர் நீண்ட விளக்கம் அளித்தார். அதை ஏற்காமல் திமுக உறுப்பினர்கள் தாங்களாகவே வெளிநடப்பு செய்தனர். தேசிய கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தாலும் மனமுவந்து ஜனநாயக கடமையாற்ற மீண்டும் பேரவைக்கு வந்துள்ளீர்கள். திமுக உறுப்பினர்களை பேரவைத் தலைவர் வெளியேற்றவில்லை. எனவே, காங்கிரஸைப் பின்பற்றி திமுக உறுப்பினர்களும் பேரவைக்கு வரலாம். விவாதங்களில் பங்கேற்கலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை’’ என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, ‘‘காங்கிரஸ் உறுப்பினர்களைப் போல திமுகவினரும் பேரவைக்கு வந்து விவாதங்களில் பங்கேற்கலாம். அவர்களை பேரவைத் தலைவர் வெளியேற்றவில்லை. அவர்களாகவே வெளிநடப்பு செய்து புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். எனவே, அவர்கள் பேரவைக்கு வர எந்தத் தடையும் இல்லை. ஆனால், சட்டப் பேரவை நடக்கும்போதே வெளியே சென்று கூட்டம் போட்டு பேசுகின்றனர். உண்மை மக்களுக்கு தெரிந்துவிடும் என்ற பயம் திமுகவினருக்கு உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x