Published : 04 May 2018 09:27 PM
Last Updated : 04 May 2018 09:27 PM
மதுரவாயலில் கடன் பிரச்சினையில் பணம் கேட்ட மனைவியைக் கொன்றுவிட்டு மாரடைப்பு என நாடகமாடிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மதுரவாயல் கங்கையம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் சீனிவாசன் (37). பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி (33) வீட்டிலேயே டெய்லராகப் பணியாற்றி வந்தார். இருவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லை.
சீனிவாசனுக்கு மதுப்பழக்கம் உண்டு. இதனால் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் மதுவுக்கு செலவழித்து வந்தார். பல இடங்களில் கடன் வாங்கினார். மது போதை காரணமாக சரிவர வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார்.
குடும்ப நிலையைக் கண்டு கவலைப்பட்ட இந்திராணி பல முறை குடிப் பழக்கத்தை விட்டுவிடும்படி கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு இந்திராணியை சீனிவாசன் தாக்கியதும் நடந்திருக்கிறது. கடன் பிரச்சினை அதிகமானதால் கடன்காரர்கள் வீட்டு வாசலில் வந்து சத்தம் போடுவது பற்றியும் இந்திராணி கேட்பதாலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கம் போல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த கணவன் சீனிவாசனிடம் வீட்டு வாடகை கொடுக்க வேண்டும், கடன் 4000 ரூபாய் உள்ளது. அதைக் கேட்கிறார்கள் என்று இந்திராணி கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சீனிவாசன் மனைவி இந்திராணியைத் தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் கழுத்தில் துணியைப் போட்டு இறுக்கியுள்ளார்.
இதில் மூச்சு திணறி இந்திராணி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் கொலையை மறைக்க இந்திராணி மாரடைப்பால் உயிரிழந்ததாக நாடகமாடி சத்தம் போட்டு அழுதுள்ளார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தவர் வீட்டுக்குள் ஓடி வந்துள்ளனர். அவர்களிடம் திடீரென இந்திராணி மார்பை பிடித்துக்கொண்டு சாய்ந்து விட்டதாக கூறியுள்ளார்.
அங்கு கிடந்த இந்திராணியைப் பார்த்தவர்கள் சந்தேகமடைந்து மதுரவாயல் போலீஸில் புகார் அளிக்க, அங்கு வந்த போலீஸார் இந்திராணி பிணத்தை சோதித்தபோது அவர் கழுத்தில் இருந்த காயத்தழும்பை பார்த்து சந்தேகமடைந்து சீனிவாசனைப் பிடித்து விசாரித்த போது அவர் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இந்திராணியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் சீனிவாசனை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT