Published : 04 May 2018 09:30 AM
Last Updated : 04 May 2018 09:30 AM

காவிரி வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்: முதல்வர் பழனிசாமி நம்பிக்கை

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் நல்ல தீர்ப்பு அளிக்கும் என தமிழக முதல்வர் கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

புரட்சி பாரதம் கட்சியின் 40-ம் ஆண்டு தொடக்க விழா, விருதுகள் வழங்கும் விழா மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது: காவிரி வழக்கில் சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் நல்ல தீர்ப்பு அளிக்கும் என நம்புகிறேன்.

அதிமுகவை ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் உடைக்க முடியாது. ஆட்சியையும் கவிழ்க்க முடியாது. மு.க. ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது. அனைத்து திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தும். என்றைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அதிமுக பாடுபடும் என்றார்.

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன்மூர்த்தி பேசும்போது, “உயர்கல்வி பயிலும் ஆதிதிராவிட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை வளம்பெறவும், அவர்களின் பொருளாதாரம் முன்னேற்றம் காணவும் பல்வேறு திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார். வரும் காலங்களிலும் இந்தத் திட்டங்கள் தொடரும்” என்றார்.

இந்த விழாவில் அமைச்சர் பா.பெஞ்சமின், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வேணுகோபால், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x