Published : 04 May 2018 09:14 AM
Last Updated : 04 May 2018 09:14 AM

அரக்கோணம் சந்திப்பு விரிவாக்கப் பணிகள் நடப்பதால் தற்காலிகமாக விரைவு ரயில்கள் திருவள்ளூரில் நிறுத்தி இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அதிகாரி தகவல்

அரக்கோணம் ரயில் யார்டு (பணிமனை) தரம் உயர்த்தும் பணிகள் நடப்பதால், தினமும் நூற்றுக் கணக்கான மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. எனவே, பயணிகளின் வசதிக்காக அந்த வழியாக இயக்கப்படும் 10-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் திருவள்ளூரில் தற்காலிகமாக நிறுத்தி இயக்கப்படுகின்றன.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் விரிவாக்கம் மற்றும் யார்டு தரம் உயர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், கடந்த சில நாட்களாக விரைவு மற்றும் மின்சார ரயில் சேவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப் படுகிறது. மே 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரையில் தினமும் நூற்றுக்கணக்கான மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீரான மின்சார ரயில் சேவை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, பயணிகளின் வசதியைக் கருத்தில்கொண்டு இந்த வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் திருவள்ளூரில் தற்காலிகமாக நிறுத்தி இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

மீண்டும் வழக்கம்போல்..

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அரக்கோணம் ரயில் யார்டு தரம் உயர்த்தும் பணிகள் நடப்பதால், விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகளின் வசதிக்காக திருவள்ளூரில் விரைவு ரயில்கள் நிறுத்திச் செல்ல தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிருந்தாவன், சேரன் உட்பட 10-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் நின்று செல்லும். அரக்கோணம் யார்டு பணி முடிந்தவுடன், மீண்டும் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x