Published : 04 May 2018 07:23 AM
Last Updated : 04 May 2018 07:23 AM
கோவையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த குட்கா ஆலையில் போலீஸார் நேற்று மீண்டும் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
கோவை கண்ணம்பாளையத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்த பான்மசாலா தயாரிப்பு ஆலையில், குட்கா பொருட்கள் தயாரிக்கப்படுவதாக வந்த தகவலின் பேரில் கடந்த 27-ம் தேதி போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், 648 கிலோ குட்கா உட்பட சுமார் 26 டன் மூலப் பொருட்களை கைப்பற்றிய போலீஸார், ஆலைக்கு ‘சீல்’ வைத்தனர். ஆலை மேலாளர், 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் அமித்ஜெயின் என்பவரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், ‘சீல்’ வைக்கப்பட்ட குட்கா தயாரிப்பு ஆலைக்குள் நேற்று காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட போலீஸார் சென்றனர். மீண்டும் ஆலையில் ரெய்டு நடப்பதாகவும். வருவாய்த் துறையினர் யாரும் இல்லாமலேயே ‘சீல்’ உடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. சுமார் 3 மணி நேர சோதனையில் குட்கா மாதிரிகளை போலீஸார் சேகரித்தனர்.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் என்பவர் முன்னிலையில் ‘சீல்’ உடைக்கப்பட்டு, கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பின்னர் அவற்றை மதிப்பீடு செய்யும் பணி நடந்தது. அதன் பிறகு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான குட்கா மாதிரிகளை சேகரித்துள்ளோம். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் குறித்து ஆலை நிர்வாகத்தினர் கொடுத்த தகவல் சரியாக உள்ளதா என்பதை மதிப்பீடு செய்து வருகிறோம்” என்றனர்.
மாவட்ட எஸ்பி பா.மூர்த்தி கூறும்போது, “வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய பொருட்களை விசாரணை அதிகாரிகள் சேகரித்துச் சென்றுள்ளனர். முறைப்படி வருவாய்த் துறையினர் முன்னிலையில் அந்த பணிகள் நடந்துள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT