Published : 04 May 2018 07:03 AM
Last Updated : 04 May 2018 07:03 AM

மைசூர் விலங்கியல் பூங்காவுக்கு 2 பச்சை அனகோண்டா பாம்புகள்: இலங்கை அன்பளிப்பாக வழங்கியது

மைசூரில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவுக்கு 2 பச்சை நிற அனகோண்டா பாம்புகளை இலங்கை அன்பளிப்பாக வழங்கி உள்ளது.

இலங்கையில் மலைப்பாம்புகளைத் தமிழர்கள் ஆனை கொன்றான் (யானையைக் கொல்பவன்) என்றும், சிங்களர்கள் ஹெனகாண்டாயா என்றும், பழங்குடியின மக்கள் சுகுரி, சுகுரிபு, மடடோரா, யகுமாமா ஆகிய பெயர்களிலும் அழைக்கின்றனர்.

இலங்கைக்கு வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள் மலைப்பாம்புகளை ஆனைக் கொன்றான் என்ற பெயரில் தமிழர்கள் அழைப்பதை கேட்டனர். ஆனால் அவர்கள் வாயில் அந்த சொற்கள் நுழையாமல் அனகோண்டா என்று மருவிவிட்டது.

ஐக்கிய அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட நேஷனல் ஜியாகிராபிக் சொசைட்டி அனகோண்டா என்ற சொல் ஆனைக் கொன்றான் என்ற தமிழ் சொற்களில் இருந்து வந்ததை பதிவு செய்துள்ளது. இவ்வாறுதான் அமேசான் காடுகளில் வாழும் ராட்சத மலைப்பாம்புகளுக்கு அனகோண்டா என்ற தமிழ் பெயர் வந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசு மைசூர் விலங்கியல் பூங்காவுக்கு 2 பச்சை நிற அனகோண்டா பாம்புகளை அன்பளிப்பாக வழங்கி உள்ளது.

ஒரு ஆண் மற்றும் பெண் பச்சை அனகோண்டாக்களுக்கு தலா 4 வயது 8 மாதங்கள் ஆகிறது. தலா 15 கிலோ எடையுள்ள 2 பாம்புகளின் நீளம் 6 அடி முதல் 8 அடி ஆகும்.

இந்த பாம்புகளுக்குப் பதிலாக மைசூர் தேசிய விலங்கியல் பூங்கா சார்பாக இலங்கை தேசிய பூங்காவுக்கு ஒரு ஜோடி புல்வாய் மான்களும் (Blackbuck), ஒரு ஜோடி மரையான் பசுக்களும் (Nilgai) வழங்கப்பட உள்ளன.

முன்னதாக கடந்த 2011-ம் ஆண்டில் மைசூர் விலங்கியல் பூங்காவுக்கு 5 பச்சை அனகோண்டா பாம்புகளை இலங்கை அன்பளிப்பாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x