Published : 30 Apr 2018 08:42 PM
Last Updated : 30 Apr 2018 08:42 PM

கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டும் போது விபரீதம்: மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

 பெருங்களத்தூரில் கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது கடப்பாரை மின்சார கேபிளில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து இரண்டு தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை முடிச்சூர் ரங்கநாதன் நகரில் வசிப்பவர் ஜெகந்நாதன். இவர் தன் வீட்டுக்கு காம்பவுண்ட் சுவர் கட்ட முடிவெடுத்தார். இதற்காக பழைய பெருங்களத்தூரை பாலாஜி நகரைச் சேர்ந்த குமரேசன் (29), ராஜேந்திரன் (27) இருவரையும் கூலி பேசி அழைத்து வந்தார்.

காம்பவுண்ட் சுவர் கட்டும் முன் கடைக்கால் போட பள்ளம் தோண்ட வேண்டி இருந்தது. இதற்காக கடப்பாரையுடன் குமரேசன் பள்ளம் தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார். உடன் ராஜேந்திரன் மண்வெட்டியுடன் மண்ணை அள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கடப்பாரை தரைக்குள் பதிக்கப்பட்டிருந்த மின்சார கேபிளை துண்டிக்க உடனடியாக குமரேசன் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் ஆவென்று அலற என்னவோ ஆகிவிட்டது என்று ராஜேந்திரன் குமரேசனைத் தொட அவர்மீதும் மின்சாரம் பாய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

உடனடியாக அக்கம் பக்கமுள்ளவர்கள் இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அவர்களை சோதித்த மருத்துவர் அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து இருவரது உடலும் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தாம்பரம் போலீஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x