Published : 30 Apr 2018 03:44 PM
Last Updated : 30 Apr 2018 03:44 PM

தஞ்சை டெல்டா பகுதியில் சிஆர்பிஎப் போலீஸ்: எதிர்ப்பு வலுத்தாலும் முகாமிட முடிவு

தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் டெல்டா மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் போலீஸ் படையினர் திடீரென குவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்ப்பு வலுத்தாலும் போலீஸார் அங்கேயே முகாமிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம்,புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மீத்தேன், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு போன்ற மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த திட்டங்களுக்கு அங்குள்ள விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் துணை ராணுவம் என்று அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் (சிஆர்பிஎப்) படையினர் சுமார் 2 ஆயிரம் பேர் டெல்டா மாவட்டங்களுக்கு திடீரென வரவழைக்கப்பட்டு, ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டனர்.

குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான மத்திய போலீஸ் படையினர் தங்க வைக்கப்பட்டனர். இதுகுறித்து தமிழக காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மத்திய போலீஸ் படை எதற்காக வந்திருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் அவர்களை அழைக்கவில்லை. அவர்கள் எங்களிடம் எந்த உதவியும் இதுவரை கேட்கவில்லை’ என்று தெரிவித்திருந்தனர்.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிய எண்ணெய் கிணறுகள் தோண்டுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து விட்டது. அந்தப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்காக வடமாநிலங்களில் இருந்து அதிகாரிகளும், பெரிய அளவிலான இயந்திரங்களும் வரவழைக்கப்பட உள்ளன.

இந்த நேரத்தில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறும். இதற்காக கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே, தமிழக போலீஸாரின் பாதுகாப்பை மட்டும் நம்பியிருக்காமல் மத்திய போலீஸ் படை பாதுகாப்பும் இருந்தால் கூடுதல் பலமாக இருக்கும் என்பதால்தான் மத்திய போலீஸ் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது.

மாநில அரசுக்கே தெரியாமல் சிஆர்பிஎப் போலீஸார் எப்படி வந்தார்கள் என்ற கேள்விக்கும் தமிழக அரசிடமிருந்து பதில் இல்லை. அது சாதாரண பாதுகாப்புதான் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயக்குமார் போன்றவர்கள் பதிலளித்தனர்.

இந்நிலையில் செய்தி வெளியானதை அடுத்து மேலதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சிஆர்பிஎப் போலீஸாரை திரும்ப அழைத்துக்கொள்ளலாமா என்று ஆலோசிக்கப்பட்டதாகவும், என்ன ஆனாலும் போலீஸாரை வாபஸ் வாங்குவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x