Published : 30 Apr 2018 01:01 PM
Last Updated : 30 Apr 2018 01:01 PM

‘‘ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை’’ - வேதாந்தா நிர்வாகம் திட்டவட்டம்

ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வேதாந்தா குழுமத்தின் வர்த்தக மேம்பாட்டுத்துறை இயக்குநர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் மதுரை புறவழிச்சாலையில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உருக்கி வயர்களாகவும், கம்பிகளாகவும் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தனது தொழிற்சாலையை விரிவாக்கும் செய்ய முடிவு செய்து, தனது உற்பத்தியை மேலும் 4 லட்சம் டன் அளவுக்கு அதிகரிக்கத் திட்டமிட்டது.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு அந்த ஆலையைச் சுற்றி இருக்கும் கிராமமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தினர். ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுப்புறச்சூழல் சீர்கோடு, உடல்நலன் பாதிப்பு, குடிநீர்மாசு போன்றவை ஏற்படுகிறது என்றும் கிராமமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகே அமைந்திருக்கும் பண்டாரம்பட்டி, தெற்குவீரபாண்டியபுரம், உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி 78-வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் வர்த்தக மேம்பாட்டு இயக்குநர் ஆர்.கிஷோர் குமார் தி இந்துவுக்கு(ஆங்கிலம்) பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை முழுமையாகச் சட்டத்துக்கு உட்பட்டுச் செயல்பட்டு வருகிறது இப்போது ஏற்பட்டுள்ள குழப்பமான நிலைக்கு சட்டத்தின் மூலம் தீர்வு காணப்படும். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை நாங்கள் தீவிரமாக கண்காணித்து, மாசு எந்த அளவில் இருக்கிறது என்பதையும் தொடர்ந்து கவனித்து வருகிறோம். மற்றும் இந்த வழக்கில் மற்ற அம்சங்களையும் கவனத்து வருகிறோம்.

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்படுவதற்கு பசுமை தீர்ப்பாயம் உள்ளிட்டவை நீண்டகாலத்துக்கு முன்பாகவே எங்களுக்கு அனுமதி தந்துள்ளன. மேலும், நிறுவனத்தின் உரிமத்தை புதுபிக்கும் காலக்கெடு முடிவதற்கு மிக முன்பாகவே, நாங்கள் அதற்குத் தமிழக அரசிடம் விண்ணப்பித்துவிட்டோம்.

ஆனால், தமிழக அரசு அதிகாரிகள் உரிமம் புதுப்பிக்கும் காலக்கெடு முடிந்தபின், பல்வேறு ஆவணங்கள் தேவை என கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.  எங்களைப் பொருத்தவரை ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடிவைத்து, உற்பத்தியை நிறுத்திவைத்து இருப்பதால், நாள் ஒன்றுக்கு 1200 டன் தாமிரம் உற்பத்தி பாதிக்கும்.

இதனால், தேவைக்கும், தாமிரத்தின் சப்ளேவுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தும். இந்த இடைவெளியைச் சமாளிக்க, மத்திய அரசு வேறுவழியின்றி, வெளிநாடுகளில் இருந்துதான் தாமிரத்தை இறக்குமதி செய்ய வேண்டியது இருக்கும். இதனால், அன்னியச்செலாவணியை அதிகமாகச் செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

நாட்டின் தாமிரத்தின் தேவையை நிறைவு செய்வதில் ஸ்டெர்லைட் ஆலை 3-வது இடத்தில் இருந்து வருகிறது. பல்வேறு சர்வதேச தரநிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த 2 ஆண்டுகளில் 7 சதவீதம் அளவுக்கு உயரும் எனத்தெரிவித்துள்ளன.

ஆனால், தொடர்ந்து ஆலையை மூடிவைத்து இருப்பதால், தாமிரத்தின் தேவைக்கும், சப்ளைக்கும் இடையே இருக்கமான நிலை ஏற்படும். ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கும் திட்டம் குறித்தும் மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்யப்படும். இப்போது ஏற்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி நிறுத்தம் என்பது, சர்வதேச தாமிர உலகில் புதிய பரிமாணத்தை உண்டாக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x