Published : 30 Apr 2018 09:32 AM
Last Updated : 30 Apr 2018 09:32 AM

எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பால விரிவாக்கப் பணி தொடக்கம்: மாற்று ஏற்பாடு இல்லாததால், பயணிகள் அவதி

எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடைகள் எண் 10, 11 அருகே நடைமேம்பால விரிவாக்கப் பணி தொடங்கியுள்ளது. ஆனால், பயணிகள் பாதிப்பின்றி செல்ல எந்த முன்னேற்பாடுகளும் செய்யப்படாமல் இருக்கின்றன. இதனால், பல ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் முக்கியமானதாக இருக்கிறது. தமிழகத்தின் பல முக்கிய நகரங்களுக்கும் இங்கிருந்து விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, வெளி மாநிலங்களுக்கும் எழும்பூர் வழியாக பல்வேறு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

அடிப்படை வசதிகள்..?

எழும்பூர் ரயில் நிலையத்தில் போதிய அளவில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதால், பெரிதும் அவதிப்படுகின்றனர். இங்கு, 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைமேடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. நடைமேடை முழுவதுமாக நிரம்பிவிடுகிறது. மெதுவாக மக்கள் நகர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, நடைமேம்பால விரிவாக்கப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கு முன்பு விரைவு ரயில்கள் இயக்கப்படும் 6, 7, 8, 9-ம் நடைமேடைகளில் நடைமேம்பால விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட்டது. விரைவு ரயில்களில் பயணிகள் வந்து செல்வது குறைவு என்பதால், பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.

தற்போது, மின்சார ரயில்கள் இயக்கப்படும் நடைமேடைகள் 10, 11-ல் நடைமேம்பால விரிவாக்கப் பணி தொடங்கியுள்ளது. தினமும் 50,000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். ஆனால், பயணிகள் பாதிப்பு இல்லாமல் வந்து செல்ல எந்த முன்னேற்பாடுகளும் செய்யப்படாமல் இருக்கின்றன. இதனால், பயணிகள் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதுதொடர்பாக ரயில் பயணிகள் சிலர் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பால விரிவாக்கப் பணி தொடங்கியுள்ளது வரவேற்கக் கூடியது.

ஆனால், மின்சார ரயில்களில் தினமும் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்ல இதுவரையில் எந்த முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை. தற்போது சாதாரணமாக பள்ளம் தோண்டும் பணி தொடங்கியுள்ள நிலையிலேயே, கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

கூட்ட நெரிசல் அதிகரிப்பு

இதுவே, முழு அளவில் பணிகள் தொடங்கினால் இந்த வழியாக பயணிகள் செல்ல முடியாது. பின்புறத்தில் இருக்கும் நடைமேம்பாலத்திலும் மக்கள் ஒரே நேரத்தில் செல்ல முடியாது. எனவே, பயணிகள் செல்ல முதலில் முன்னேற்பாடு செய்ய, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்ட நெரிசல் அதிகரித்து வருவதால், மாம்பலம் ரயில் நிலையத்தில் இருப்பது போல், இங்கும் இரட்டை நடைமேடை அமைக்கலாம். இதனால், பயணிகள் வந்து செல்ல வசதியாக இருக்கும்’’ என்றனர்.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எழும்பூர் ரயில்நிலையம் நுழைவாயில் அருகில் உள்ள நடைமேம்பாலத்தை தற்போதுள்ள 12 அடி அகலத்தில் இருந்து 22 அடியாக விரிவுப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி தற்போது, நடைமேடை எண் 10, 11-ல் நடைமேம்பால விரிவாக்கப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே, பயணிகள் பாதிப்பு இல்லாமல் செல்ல, உரிய நேரத்தில் மாற்று ஏற்பாடு செய்யப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x