Published : 30 Apr 2018 09:30 AM
Last Updated : 30 Apr 2018 09:30 AM

கழிவறைகளை பயன்படுத்த பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கழிவறைகளை பொதுமக்கள் பயன்படுத்த பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகை அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் பங்கேற்று, குப்பைகள் அகற்றும் பணி, கழிவறைகள் பராமரிப்பு, செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:

சென்னை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளும் 100 சதவீதம் திறந்தவெளியில் அசுத்தம் செய்யாத பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. அதனால் மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து கழிவறைகளையும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

அவற்றை சீரமைத்து நல்ல முறையில் இயங்கச் செய்ய வேண்டும். மாநகராட்சி கழிப்பறைகளை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் பணம் வாங்கக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பல கழிவறைகளை பயன்படுத்த பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. மாநகராட்சியின் கழிவறைகள் அதிக அளவில் ஏழைகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் மாநகராட்சி கழிவறைகளை பயன்படுத்த பணம் வசூலிப்பதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளை ஆய்வு செய்து, தேவையான இடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தா.கார்த்திகேயன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x