Published : 30 Apr 2018 08:49 AM
Last Updated : 30 Apr 2018 08:49 AM
அம்மா அணி உயிர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சசிகலாவின் சகோதரர் வி.திவாகரன் கூறினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்மா அணியின் புதிய அலுவலகத்தை நேற்று அவர் திறந்துவைத்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொது் செயலாளர் தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அமமுகவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், தொடர்ந்து அம்மா அணியிலேயே இருப்பதாகவும் திவாகரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மன்னார்குடியில் அம்மா அணியின் புதிய அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் திவாகரன் கூறியது:
அம்மா அணி தினகரனால் மூடிவைக்கப்பட்டிருந்தது. அந்த அமைப்பை தற்போது உயிர்ப்பிக்கும் விதமாக புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை அதிகம் சேர்த்து, அறிவியல்பூர்வமாக சிந்தித்து உயர்ந்தபட்ச அமைப்பாக இனி இந்த அமைப்பு செயல்படும். சென்னையில் தலைமை அலுவலகம் திறக்கப்படும்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கைப்படி, சசிகலாவின் வழிகாட்டுதலோடு நான் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவேன். எம்ஜிஆர் காலத்தில் இருந்து நான் அதிமுகவில் பணியாற்றியுள்ளேன். ஜெயலலிதாவை பொதுச் செயலாளராக்கியதில் எனக்கு முழு பங்குண்டு. தினகரனின் செயல்பாடுகள் அனைத்தும் பொய்யும், புரட்டுமாக, மாயையை ஏற்படுத்துவதுபோல உள்ளது.
குடும்ப அரசியல் கூடாது என தினகரன் கூறுகிறார். குடும்பம் இல்லாமல் அவர் எங்கிருந்து வந்தார். சசிகலாவின் சகோதரி மகன் என்பதாலேயே அவருக்கு அப்போது எம்பி பதவி கிடைத்தது. பின்னர் சில காலம் அரசியலில் இருந்தே காணாமல் போய்விட்டார். தற்போது ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவை பிடித்து துணைப் பொதுச்செயலாளர் பதவி வாங்கிக் கொண்டார். தினகரன் தனது மனைவி, மைத்துனர் வெங்டேசனின் வழிகாட்டுதலிலேயே கட்சியை நடத்தி வருகிறார். இதனால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களை அரவணைப்பதற்காகவே இந்த அமைப்புக்கு உயிர்கொடுக்க இந்த அலுவலகத்தை திறந்துள்ளோம் என்றார்.
அம்மா அணியின் செய்தி தொடர்பாளர்களாக மன்னார்குடி வி.கே.இளந்தமிழன், திருச்சி அல்லூர் சீனிவாசன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி கே.கோவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக திவாகரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT