Published : 30 Apr 2018 08:39 AM
Last Updated : 30 Apr 2018 08:39 AM

தமிழகத்தில் 2,000 மெகாவாட் அளவுக்கு மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது: மின் வாரிய சிஐடியு தொழிற்சங்க தலைவர் தகவல்

தமிழகத்தில் சுமார் 2,000 மெகாவாட் அளவுக்கு மின் தட்டுப்பாடு நிலவுவதாக மின்வாரிய சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தெரி வித்துள்ளார்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநில செயற்குழு கூட்டம், சென்னை சிந்தாதிரிப்பேட்டை யில் நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறிய தாவது:

தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடையத் தொடங்கி இருப்பதால் மின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப மின் உற்பத்தி இல்லாததால் சுமார் 2,000 மெகாவாட் அளவுக்கு மின் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், பராமரிப்புப் பணி என்ற பெயரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை இல்லை என்றும், தேவையான அளவுக்கு மின் உற்பத்தி நடப்பதாகவும் மின் துறை அமைச்சர் கூறிவருகிறார். அதில் உண்மை இல்லை. எனவே, அனைத்து அனல் மின் நிலையங்களிலும் முழு திறனில் உற்பத்தி செய்ய மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

மின் வாரியத்தில் பணிபுரியயும் ஒப்பந்ததொழிலாளர் களுக்கு ஊதிய உயர்வும் பணி நிரந்தரமும் வழங்க வலியுறுத்தி வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி ஆகிய அனல் மின் நிலையங்களில் மே 22-ம் தேதி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x