Published : 09 Apr 2018 09:21 PM
Last Updated : 09 Apr 2018 09:21 PM

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு; தீர்ப்பு அல்லது தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி மனு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யபட்ட தொகுதிகளின் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவுக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், தங்களது தகுதி நீக்கத்தை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இவற்றில் 18 எம்ஏல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கிலும், சக்கரபாணி வழக்கிலும் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக 18 தொகுதிகளும் உறுப்பினர் இல்லாமல் காலியாக இருப்பதால், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை விரைந்து அறிவிக்க வேண்டுமென தலைமை நீதிபதி அமர்வில் செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் முறையீடு செய்தார். தீர்ப்பை அறிவிக்க வேண்டும் அல்லது அந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அப்போது தலைமை நீதிபதி குறுக்கிட்டு பேரவை நிகழ்வுகள் தொடர்பான வழக்குகள் படிப்படியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. எனவே, உங்கள் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யுங்கள் விசாரிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x