Published : 09 Apr 2018 11:15 AM
Last Updated : 09 Apr 2018 11:15 AM

பாமகவின் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமாகா ஆதரவு: ஜி.கே.வாசன் அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் வலியுறுத்தி வரும் ஏப்ரல் 11 அன்று பாமக சார்பில் நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு தமாகா ஆதரவு அளிப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,

“தமிழக மக்களின் நியாயத்தை, உணர்வுகளை மத்திய அரசு புரிந்துகொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழக மக்கள் நலன் காக்க வேண்டும்

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்க வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்கப்பட வேண்டும் என்பது நியாயமான ஒன்று. காரணம் காவிரி நதிநீர் தண்ணீர் கிடைக்கப்பெறாமல் தமிழகத்தில் விவசாயம் படிப்படியாக நலிவடைந்து முற்றிலும் அழிந்து போகக்கூடிய நிலையை நோக்கி செல்கின்றது. மேலும் குடிநீருக்கும் போதிய தண்ணீர் இல்லாமல் பொது மக்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டு, விவசாயத்தையும் இழந்து ஒட்டு மொத்த தமிழகமே வாழ்வாதாரம் இன்றி உயிர் வாழ முடியாத சூழல் உருவாகிவிடும்.

எனவே தமிழகத்தின் தற்போதைய உயிர் பிரச்சனை தண்ணீர் பிர்சசனை, அதுவும் உடனடியாக தண்ணீர் தேவைப்படுவதால் காவிரி நதிநீரைப் பெறுவதற்கு காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கடந்த மார்ச் 29 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 29 ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், போராட்டம், கடை அடைப்பு, முழு அடைப்பு, உண்ணாவிரதம் ஆகியவற்றை விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் போன்ற பலதரப்பினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இச்சூழலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக வருகின்ற ஏப்ரல் 11 அன்று பாமக சார்பில் நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு தமாகா ஆதரவு கொடுக்கின்றது.

இப்படி தமிழகம் முழுவதும் நியாயத்திற்காக, உண்மைக்காக போராடும் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் இனிமேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழக மக்கள் நலன் காக்க வேண்டும்”

என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x