Published : 09 Apr 2018 08:51 AM
Last Updated : 09 Apr 2018 08:51 AM

மக்கள் வந்து செல்ல வசதியாக 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம் அமைக்க திட்டம்: தெற்கு ரயில்வே, மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஆலோசனை

மின்சார ரயில் நிலையங்களுக்கு மக்கள் வந்து செல்ல வசதியாக மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம் அமைக்கப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, விமான நிலையம் – ஆலந்தூர் - சின்னமலை, பரங்கிமலை - கோயம்பேடு - நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 20,000-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, சென்ட்ரல் - எழும்பூர் - நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் விரைவில் மெட்ரோ ரயில்சேவை தொடங்கவுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதி களும், மெட்ரோ ரயில்களில் ஏசி வசதியும் இருக்கின்றன.

பிரம்மாண்ட ரயில் நிலையம்

ஆனால், மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகை யில் போதிய அளவில் நடைமேம்பால வசதி இல்லாமல் இருக்கின்றன. இதனால், பொதுமக்கள் வந்து செல்ல அவதிப்படுகின்றனர். குறிப்பாக, பரங்கிமலை, கிண்டி புதியதாக சேவை தொடங்கவுள்ள எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் அருகே இருக்கும் மின்சார ரயில் நிலையங்களுக்கும் செல்லும் வகையில் நடைமேம்பால வசதிகள் இல்லா மல் இருக்கின்றன.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘பரங்கிமலை, கிண்டி ஆகிய மின்சார ரயில் நிலையங்களின் அருகே மெட்ரோ ரயில் நிலையங்கள் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளன. ஆனால், மக்கள் நடந்து செல்ல நடைமேம்பால வசதி இல்லாமல் இருக்கின்றன.

அதிக கூட்ட நெரிசல்

குறிப்பாக, கிண்டி, பரங்கிமலை மின்சார ரயில் நிலையங் களிலும் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏற்கெனவே இருக்கும் குறுகிய நடைமேம்பாலங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள். மேலும், விரைவில் சேவை தொடங்கவுள்ள எழும்பூர் ரயில் நிலையத்திலும் புதிய நடைமேம்பாலம் அமைக்காமல் இருக்கிறது. எனவே, மின்சார நிலையங்களில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக் கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:

‘‘பரங்கிமலை, கிண்டி, எழும்பூர் போன்ற மின்சார ரயில் நிலையங்களின் அருகே அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மக்கள் வந்து செல்லும் வகையில் புதிய நடைமேம்பாலம் அமைக்க முடிவு செய்துள்ளாம்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். எனவே, இதற்கான இடங்களைத் தேர்வு செய்து நடைமேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.’’

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x