Published : 09 Apr 2018 07:58 AM
Last Updated : 09 Apr 2018 07:58 AM
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச முதல்வரோ அல்லது துணை முதல்வரோ நேரம் கேட்காத நிலையில், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது சரியல்ல என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
காவிரி என்பது நீண்ட நாள் பிரச்சினை. ஏறக்குறைய 100 ஆண்டுகளாக இப்பிரச்சினை தொடர்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அதில் உள்ள பிரச்சினைகளை பேசித்தான் தீர்க்க முடியும்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திகூட, கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் காவிரி நீரை தமிழகத்துக்கு தரத் தேவையில்லை எனக் கூறியுள்ளார். இதை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கண்டித்திருக்க வேண்டாமா?
கர்நாடகாவில் பாஜக ஆட்சியைப் பிடித்தால் 2 மாநிலங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படுத்தப்படும். காவிரி பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறி இருக்கிறார்.
காவிரி பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது சரியல்ல. பிரதமரை சந்திக்க முதல்வர், துணை முதல்வர் நேரம் கேட்டார்களா? முதலில் அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பேசிய பிறகு பிரதமரை சந்திக்கலாம் என்பதை மாற்றிக் கூறுவது தமிழக மக்களை முட்டாள்களாக்கும் செயல். இவ்வாறு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT