Published : 09 Apr 2018 07:57 AM
Last Updated : 09 Apr 2018 07:57 AM
காவிரி பிரச்சினையில் கர்நாடகமும், தமிழகமும் புதுச்சேரியை வஞ்சிப்பதாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
காரைக்கால் கடைமடை பகுதியாக இருப்பதால் வறட்சி மற்றும் வெள்ளத்தாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றது. தமிழகம் கர்நாடகாவில் இருந்து பெறும் காவிரி நீரில் உரிய விகிதாச்சாரத்தை காரைக்காலுக்கு தருவதில்லை. தமிழகமும், கர்நாடகமும் புதுச்சேரியை வஞ்சிக்கின்றன. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. புதுச்சேரி விவசாயிகளின் நலன்தான் எங்களுக்கு முக்கியம். அவர்களை காக்கும் கடமையும் பொறுப்பும் புதுச்சேரி அரசுக்கு உண்டு. இங்குள்ள விவசாயிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காவிரி மீட்புப் பயணம் நாளை மறுதினம் (ஏப்.11) காரைக்காலுக்கு வருகிறது. அதில் நான், காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம், வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் பங்கேற்கிறோம். மத்திய அரசுக்கு எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமோ, அந்தளவுக்கு அழுத்தம் கொடுப்போம். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT