Published : 09 Apr 2018 07:47 AM
Last Updated : 09 Apr 2018 07:47 AM

அட்சயதிருதியை வருவதை முன்னிட்டு பெண்களை கவர ஆயிரக்கணக்கில் புதிய டிசைன் தங்க நகைகள் தயார்

அட்சயதிருதியை தினம் வருவதை முன்னிட்டு பெண்களை கவரும் வகையில் ஆயிரக்கணக்கான புதிய டிசைன் நகைகளை வியாபாரிகள் தயார் செய்து வருகின்றனர்.

அட்சயதிருதியை தினத்தன்று தங்கம் வாங்கினால், குடும்பத்தில் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நீண்டகால நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆண்டில் அட்சயதிருதியை வரும் 18-ம் தேதி வருகிறது. இதை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தமிழகத்தில் உள்ள நகைக் கடைகளில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் பெண்களைக் கவரும் வகையில் ஆயிரக்கணக்கில் புதிய டிசைனில் நகைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார், ‘தி இந்து’விடம் கூறும்போது, “தங்கத்தில் முதலீடு செய்வது தமிழக மக்களின் பாரம்பரியமாக இருக்கிறது. வழக்கமான பண்டிகை நாட்களை காட்டிலும், அட்சயதிருதியை நாளன்று பொதுமக்கள் நகை மற்றும் பொருட்களை வாங்க விரும்புவார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு புதிய வடிவமைப்புகளில் நகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

இந்த ஆண்டில் தங்க நகைகளின் ஒவ்வொரு பிரிவுகளிலும் 500-க்கும் மேற்பட்ட புதிய வடிவமைப்புகளில் நகைகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த ஆண்டில் அட்சயதிருதியை வரும் 17-ம் தேதி மாலையில் தொடங்கி 18-ம் தேதி முழுவதும் இருக்கும்.

பாரம்பரிய மற்றும் லைட் வெயிட் நகைகள், தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் காவிரி ஆறு மாதிரி கொண்ட டாலர்கள், மோதிரம், பிரேஸ்லெட், வளையல்கள் உள்ளிட்டவை என மொத்தம் 3 ஆயிரம் டிசைன்களில் நகைகளைத் தயாரித்துள்ளோம்.

மொத்தமுள்ள தங்க நகை வாடிக்கையாளர்களில் 20 சதவீதம் பேர் இந்த புதிய நகைகளுக்காக தற்போது முன்பதிவு செய்து விட்டனர். வழக்கமான நாட்களில் செய்யும் விற்பனையை விட, அட்சயதிருதியை தினத்தன்று 50 சதவீதம் வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x