Published : 09 Apr 2018 07:43 AM
Last Updated : 09 Apr 2018 07:43 AM
சென்னையில் நடைபெறும் பாதுகாப்புக் கண்காட்சியில் பங்கேற்க சீனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த திருவிடந்தையில் பாதுகாப்பு துறை கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு, நேற்று நடைபெற்ற முப்படைகளின் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதுகாப்புத் துறை சார்பில் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த வருடம் தமிழகத்தில் நடைபெறுகிறது.
இந்திய நிறுவனங்களின் பாதுகாப்பு தளவாட தயாரிப்புகளை வெளிநாடுகளில் சந்தைப்படுத்துவதுதான் இக்கண்காட்சியின் முக்கிய நோக்கம். இந்தக் கண்காட்சியில் வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பதோடு, பாதுகாப்பு சாதனங்களும் இடம் பெறுகிறது.
கண்காட்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது அரங்கை அமைக்க 50 சதவீதம் வரை கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். கண்காட்சியில் பங்கேற்க சீனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பங்கேற்கும் விவரம் வரும் 11-ம் தேதிதான் தெரியவரும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT