Published : 06 Apr 2018 08:52 PM
Last Updated : 06 Apr 2018 08:52 PM

குறிப்பிட்ட முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற கட்டுப்பாடு ஏன் இல்லை?-தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கேள்வி

குறிப்பிட்ட முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க ஏன் கட்டுப்பாடுகள் இல்லை என இந்திய தேர்தல் ஆணையத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்க உத்தரவிடக் கோரி கோவை மாவட்டம், ஆனைமலையைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், எம்.பி, எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிப்பது தொடர்பாக முடிவெடுக்க, மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இது சம்பந்தமாக மத்திய சட்ட ஆணையத்தின் கருத்துகளைப் பெற்று தெரிவிப்பதற்காக மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் அவகாசம் கேட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை ஏப்ரல் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து, மத்திய மற்றும் மாநில சட்ட ஆணையங்களை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டார். வழக்கு குறித்து மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

விசாரணையின் போது, அமெரிக்காவில் இரு முறைக்கு மேல் அதிபர் உள்ளிட்ட பதவிகளை வகிக்கக் கூடாது என கட்டுப்பாடுகள் உள்ளது போல, இந்தியாவில் ஏன் கட்டுப்பாடுகள் இல்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மக்களுக்காகப் பணியாற்ற வருகை தரும் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றிய முழு தகவல்களை அறிவிக்க வேண்டியது அவசியம் என்றும், அப்போதுதான் மக்களும் முழுமையாக தெரிந்துகொள்ள முடியும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x