Published : 06 Apr 2018 06:13 PM
Last Updated : 06 Apr 2018 06:13 PM

3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையே?- ஏக்கத்தில் இளம் தம்பதி தற்கொலை

திருமணமாகி மூன்றாண்டுகளாக குழந்தை பிறக்காத காரணத்தால் மனமுடைந்த இளம் தம்பதி தற்கொலை செய்துக் கொண்ட சோக சம்பவம் நாவலூரில் நடந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (35). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜயா (27) என்பவருக்கும் மூன்றாண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும் சென்னையை அடுத்த நாவலூரில் சந்தோஷமாக வசித்து வந்தனர்.

இருவருக்கும் திருமணம் நடந்து கடந்த மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். பொது நிகழ்ச்சிகள், சுப காரியங்களுக்குச் செல்லும்போது உறவினர்கள், நண்பர்கள் குழந்தை இல்லையா என்று கேட்கும் போது விரக்தி அடைந்த இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

குழந்தை இல்லாத பிரச்சினை இருவரையும் அதிகம் வாட்டியுள்ளது. இருவரும் இதை எதிர்கொள்ள முடியாமல் அவமானகரமான பிரச்சினையாகவும், குழந்தை இல்லாத ஏக்கத்துடனும் இருந்துள்ளனர். குழந்தையின்மை குறித்த மருத்துவ முன்னேற்றம் பற்றி அறியாமை, குழந்தையின்மையை எதிர்கொள்ள முடியாத ஏக்கம் காரணமாக மன உளைச்சலில் இருந்த கணவன் - மனைவி இருவரும் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

வீட்டில் கணவன் மனைவி இருவரும் தூக்கில் பிணமாகத் தொங்கியதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இருவரது பிணத்தையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் தாழம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செங்கல்பட்டு சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x