Published : 06 Apr 2018 03:25 PM
Last Updated : 06 Apr 2018 03:25 PM

தி.நகரில் கைப்பையை பறிக்க முயன்ற வழிப்பறி இளைஞர் கைது: சாமர்த்தியமாக இழுத்து வீசிய இளம்பெண்ணுக்கு பாராட்டு

தி.நகரில் சாலையில் நடந்துசென்ற இளம்பெண்ணிடம் கைப்பையைப் பறிக்க முயன்ற மோட்டார் சைக்கிள் இளைஞரை சாமர்த்தியமாக இழுத்து கீழே வீசினார் இளம்பெண். காயத்துடன் கீழே விழுந்த நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் இளமுருகன் (48), இவரது மகள் விஜய்பாரதி (25). அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும் இவரது நண்பர் மனோஜ் என்பவரும் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் நடந்து வந்துள்ளனர்.

பேசிக்கொண்டே நடந்து வந்துகொண்டிருந்த இருவரைம் பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் வட்டமடித்தபடி கவனித்து வந்துள்ளனர். விஜய்பாரதி கைப்பையை தோளில் மாட்டியபடி நடேசன் பார்க் அருகில் நண்பருடன் பேசியபடி வந்துள்ளார். அப்போது பல்சர் வாகனத்தில் வந்தவர்கள் திடீரென அவரது கைப்பையைப் பறித்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத விஜய்பாரதி சமயோசிதமாக செயல்பட்டு சட்டென்று கைப்பையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பையைப் பிடித்து இழுத்த இளைஞரை சட்டென்று இழுத்து கீழே தள்ளினார். இதில் மற்ற இருவர் வேகமாக மோட்டார் சைக்கிளை இயக்க, கைப்பையை பிடுங்கிய இளைஞர் தரதரவென்று இழுத்துச்செல்லப்பட்டார்.

பின்னர் அவர் மோட்டார் சைக்கிள் பிடியை விடப் பார்க்கும் சமயத்தில் அக்கம் பக்கத்தவர் அவரை மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவத்தில் பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த மற்ற இருவரும் ஓடிவிட்டனர். சிக்கிய நபரை போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர், விசாரணையில் அவர் பெயர் ராஜ்கிரண் (23) என்றும், தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலை குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பில் வசித்து வருகிறார் என்றும் தெரியவந்தது.

போலீஸார் தப்பி ஓடிய மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். வழக்கமாக இதுபோன்ற சம்பவங்களில் பெண்கள் கீழே விழுந்து காயமடைவார்கள். ஆனால் இந்த சம்பவத்தில் இளம்பெண் விஜய்பாரதி உறுதியாக நின்று வழிப்பறி கொள்ளையனை இழுத்து கீழே தள்ளி உள்ளதை பொதுமக்கள் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x