Published : 06 Apr 2018 09:44 AM
Last Updated : 06 Apr 2018 09:44 AM

காவிரி உரிமை மீட்புப் பயணம் திருச்சியில் நாளை தொடக்கம்: இன்று அனைத்து கட்சி கூட்டம்; ஸ்டாலின் அறிவிப்பு

திருச்சி முக்கொம்பில் இருந்து நாளை காவிரி உரிமை மீட்புப் பயணத்தை தொடங்க இருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் காவிரி பிரச்சினை யில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் போராட்டத்தின்போது கைதான தலைவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

கடந்த 1-ம் தேதி திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் 7-ம் தேதி (நாளை) திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீ்ட்புப் பயணத்தை தொடங்க இருக்கிறோம். கடலூரில் நிறைவடையும் இந்தப் பயணத்தில் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள்.

முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு தலைவர்கள் கைதாகியுள்ளதால் இன்று (ஏப்ரல் 5) மாலை 6 மணிக்கு நடைபெறுவதாக இருந்த அனைத்துக் கட்சி கூட்டம், வெள்ளிக்கிழமை (இன்று) காலை 10.30 மணிக்கு நடைபெறும். காவிரி உரிமை மீட்புப் பயணம் குறித்தும், காவிரி பிரச்சினையில் அடுத்தகட்ட போராட்டம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் சென்னை வருகிறார். அப்போது அவருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திமுக ஆதரவுக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x