Published : 06 Apr 2018 07:49 AM
Last Updated : 06 Apr 2018 07:49 AM

ஏப்.10-க்குள் வாரியம் அமைக்காவிட்டால் ஐபிஎல் போட்டியை தடுப்போம்: வேல்முருகன் எச்சரிக்கை

சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தடுப்போம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோரை விடுவிக்க வேண்டும். மேலாண்மை வாரியத்தை ஏப்.10-ம் தேதிக்குள் அமைக்காவிட்டால் நெய்வேலி என்எல்சியை முற்றுகையிடுவதுடன், அங்குள்ள அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிடுவோம்.

தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களை கருத்தில் கொண்டு, சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது. இப்போட்டியை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும். இதன்மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இதையும் தாண்டி ஐபிஎல் கிரிக்கெட் நடந்தால் அதை பார்க்க ரசிகர்கள் செல்லக் கூடாது என வலியுறுத்துகிறோம். மீறி கிரிக்கெட் போட்டி நடந்தால், எங்களது கட்சியில் உள்ள ரசிகர்களை டிக்கெட் வாங்க வைத்து மைதானத்துக்குள் சென்று, போட்டியை தடுக்க முயற்சிப்போம். 1996-ல் பாமகவில் இருந்தபோது, எனது தலைமையில் சென்னையில் கிரிக்கெட் போட்டி ஒன்றை தடுத்துள்ளோம்.

காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் எதிரானவர்கள். இதில், பாஜக ஒரு படி மேலாக உள்ளது. வாரியம் விவகாரத்தில் ராகுல், சோனியா இருவரும் வெளிப்படையாக கேள்வி எழுப்பவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x