Published : 06 Apr 2018 07:46 AM
Last Updated : 06 Apr 2018 07:46 AM

இலங்கை கடற் கொள்ளையர், கடற்படையினர் தாக்குதல்: நாகூர், காரைக்கால் மீனவர்கள் புகார்

இலங்கை கடற் கொள்ளையர், இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டம் நாகூர் பகுதியில் இருந்து ரமேஷ், லட்சுமணன், இடும்பன், செல்வமணி, குப்புசாமி ஆகிய 5 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தோப்புத்துறை அருகே 32 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 3 படகுகளில் வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் 7 பேர், நாகூர் மீனவர்களை சுற்றி வளைத்து இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இதில் 5 மீனவர்களும் காயம் அடைந்தனர். பின்னர் கத்தியைக் காட்டி, படகில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன்கள், வலை, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் லட்சுமணன் தலையில் பலத்த காயமடைந்து மயங்கினார். நேற்று அதிகாலை கரை திரும்பிய 5 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எல்லை தாண்டியதாக தாக்குதல்

இதேபோல காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் பாலுமகேந்திராவுக்கு(35) சொந்தமான பைபர் படகில், கோபி(45), ரமேஷ்(40), வீரப்பன்(60), கணேஷ்குமார்(22), ஆனந்த்ராஜ்(30) ஆகிய 6 பேரும் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி மீனவர்களைத் தாக்கியுள்ளனர். இதில், தலையில் காயமடைந்த கோபி, படகில் மயங்கி விழுந்துள்ளார். உடனே இலங்கை கடற்படையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர். கரை திரும்பிய மீனவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x