Published : 06 Apr 2018 07:45 AM
Last Updated : 06 Apr 2018 07:45 AM

சேலம் தபால் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

சேலத்தில் உள்ள தபால் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் குகை பகுதியில் தெற்கு தபால் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இதில், தபால் நிலையத்தின் முன்புற வாசல் தரைப்பகுதியில் தீப்பிடித்து கருகியது. தகவலறிந்து அங்கு சென்ற அன்னதானப்பட்டி போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது, அங்கு மதுபாட்டில் உடைந்து கிடந்தது.

மர்ம நபர்கள் மதுபாட்டிலில் பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் நிரப்பி திரியில் தீ பற்ற வைத்து வீசியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு கடையடைப்பு போராட்டத்துக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அழைப்பு விடுத்த நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பது, காவிரி விவகாரத்துக்காக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

இதையடுத்து தபால் நிலையத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், தனிப்படை அமைத்தும், அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டும் மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x