Last Updated : 20 Mar, 2018 06:04 PM

 

Published : 20 Mar 2018 06:04 PM
Last Updated : 20 Mar 2018 06:04 PM

புதுச்சேரியில் 5-வது நாளாக திரையரங்குகள் மூடல்: அரசுக்கு ரூ.15 லட்சம் வரி வருவாய் இழப்பு

புதுச்சேரியில் ஐந்தாவது நாளாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு இதுவரை ரூ.15 லட்சம் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்தன.திருட்டு விசிடி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 20 திரையரங்குகள் மூடப்பட்டு அவ்விடத்தில் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் வந்துவிட்டன. தற்போது நகரம் -கிராமம் என இரு பகுதிகளிலும் சேர்த்து 12 திரையரங்குகள் மட்டுமே உள்ளன.

ஜிஎஸ்டிக்கு முன் இத்திரையரங்குகள் கேளிக்கை வரியாக டிக்கெட் வசூலில் 25 சதவிதத்தை உள்ளாட்சித் துறைக்கு செலுத்தி வந்தன.கடந்த ஜுலை 1-ம் தேதி முதல் மத்திய அரசின் 28 சதவித ஜிஎஸ்டி, மாநில அரசின் 25 சதவித கேளிக்கை வரி ஆகியவற்றை சேர்த்து செலுத்துகின்றனர்.

இந்நிலையில் இந்த இரட்டை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 16-ம் தேதி முதல் புதுச்சேரியில் திரையரங்குகளை கால வரையறையின்றி உரிமையாளர்கள் மூடியுள்ளனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு தரப்பில் யாரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுதொடர்பாக திரையரங்கு மற்றும் அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "டெல்லியில் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க முதல்வர், அமைச்சர்கள் டெல்லி சென்றிருந்தனர். அதனால் அரசு தரப்பில் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. திரையரங்கு மூடலால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு 3 லட்சம் ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 5-வது நாளாக இன்று தொடரும் போராட்டத்தால் புதுச்சேரி அரசுக்கு 15 லட்சம் ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x