Published : 20 Mar 2018 03:21 PM
Last Updated : 20 Mar 2018 03:21 PM
தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் ரத யாத்திரை நடைபெறும்போது, சில கட்சிகள் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தமிழிசை பதிலளித்தார்.
''தமிழகத்தில் உள்ள 85% மக்களின் நம்பிக்கையாக ரத யாத்திரை உள்ளது. தமிழகத்தில் எந்தவித கலவரங்களும் இன்றி ரத யாத்திரை அமைதியாக நடைபெறும்போது திமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர் அதை ஏன் எதிர்க்கின்றனர்? ஸ்டாலின், திருமாவளவன் போன்றவர்கள் இதுபோன்ற அரசியலை இனி முன்னெடுக்க முடியாது.
தமிழகத்தில் நேர்மறையான அரசியல் வர வேண்டும். எதிர்மறையான அரசியலுக்கு இனி தமிழகத்தில் வழியில்லை.
சென்னையிலிருந்து சேலத்திற்கு அதிவிரைவு சாலை வர உள்ளது. அதேபோல், வேலூரில் விமான நிலையம் வரவிருக்கிறது. இதுபோன்று பல வளர்ச்சித் திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவந்தது மத்திய பாஜக அரசு. காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இதுபோன்று என்னென்ன வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன என அக்கட்சியினரால் பட்டியலிட முடியுமா?
தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராக பாஜக செயல்படுவதாக தொடர் தாக்குதல் நடைபெறுகிறது. ஆனால், தமிழையும் தமிழகத்தையும் உயர்த்திப் பிடிப்பது பாஜகதான்.தமிழகத்திற்கு மாற்றம் வேண்டும். அதனை பாஜகவால் தான் கொண்டு வர முடியும்.
தமிழ்நாட்டில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் புகார் எழுந்தால் பாஜக நடவடிக்கை எடுக்கும்.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த நதிநீர் பங்கீடு தமிழகத்திற்கு கிடைக்கும் என்பதில் பாஜக உறுதியுடன் இருக்கிறது’’.
இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT