Published : 20 Mar 2018 01:15 PM
Last Updated : 20 Mar 2018 01:15 PM

பெரியார் சிலையை சிதைப்பதால் கொள்கையை சிதைக்க முடியாது; காட்டுமிராண்டிக் கும்பல் தண்டிக்கப்படும் வரை திமுக ஓயாது: ஸ்டாலின்

பெரியார் சிலைகளைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வரவேண்டும். இல்லையென்றால் இத்தகைய வன்முறையாளர்களை விரட்டி அடிக்கும் முயற்சியில் இறுதிவரை திமுக தொண்டர்கள் போராடுவார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் விடுதி கிராமத்தில் பெரியார் சிலையை உடைக்கப்பட்டது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஎச்பி ரத யாத்திரை வரும் நேரத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழர்கள், பகுத்தறிவும் தன்மானமும் உள்ளவர்களாகத் தலைநிமிரச் செய்த தந்தை பெரியாரின் சிலையை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்முறையாளர்கள் சிதைத்திருக்கும் ஈனச்செயல் மானமுள்ள தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

வன்முறைக்கும், மதக் கலவரங்களுக்கும் இடம்தராத தமிழ்நாடு எனும் பெரியார் மண்ணில் வகுப்புவாத - மதவெறி சக்திகள் காலூன்ற எத்தனிக்கும் நிலையில், பெரியார் சிலையைத் தகர்ப்பது என்ற இழிவான - கோழைத்தனமான செயலை மேற்கொண்டுள்ளனர்.

சிலைகளை சிதைப்பதால் பெரியார் மண் என்ற பெருமையை ஒருபோதும் சிதைத்துவிட முடியாது என்பதை சிறுமதியாளர்களுக்கு எச்சரிக்கை செய்து நினைவூட்டுகிறேன். ​திரிபுராவில் பொதுவுடைமைப் புரட்சியாளர் லெனின் சிலையைத் தகர்த்தபோதே, பெரியார் சிலையைக் குறிவைத்து இங்கே சிலர் ஊளையிட்டனர்.

அப்போதே மாநிலத்தை ஆளும் ஆட்சியாளர்கள் உரியமுறையில் கடும் நடவடிக்கை எடுத்திருந்தால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலை மீது கை வைக்க எந்த கும்பலுக்கும் துணிச்சல் வந்திருக்காது.

‘ஊர் உறங்கிய பின் உலவும் திருடர்கள் போல இரவுநேரத்தில் ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை விடுதி என்ற கிராமத்தில் உள்ள பெரியார் சிலையின் தலையைத் துண்டித்திருக்கிறது தறுதலைகளின் கூட்டம். துணிச்சல் இருந்திருந்தால், முதுகெலும்பு உள்ளவர்களாக இருந்திருந்தால் பகல் நேரத்தில், முன்னறிவிப்பு செய்துவிட்டு பெரியார் சிலையைத் தொட்டுப் பார்த்திருக்க வேண்டும்.

​தமிழ்நாட்டில் கொல்லைப்புறமாக நுழைய நினைக்கும் கோழைக் கூட்டம், தந்தை பெரியார் சிலையைத் தகர்த்தால் அவருடைய தத்துவங்களைத் தகர்த்துவிடலாம் எனத் தப்புக் கணக்குப் போடுகிறது. நீங்கள் எத்தனை குட்டிக்கரணங்கள் போட்டாலும், அதிகார பின்புலத்தோடு எவ்வளவுதான் வன்முறையைத் தூண்டினாலும், இதுபோன்ற எத்தனை மலிவான - இழிவான செயல்களில் ஈடுபட்டாலும், தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் சீண்ட மாட்டார்கள்.

பயங்கரவாத – மதவெறி - வன்முறை சக்திகளுக்குப் பாதை வகுத்துத் தருவதுபோல, தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அதிமுக அரசு தெம்பின்றி – திராணியற்று, மத்தியில் உள்ள ஆட்சியாளர்களிடம் தெண்டனிட்டுக் கிடக்கிறது.

​தமிழ்நாட்டில் பொது அமைதியைக் குலைக்கும் வகையில் நடைபெறும் விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை அனுமதிக்கக்கூடாது என மதச் சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒருமித்த குரலில் கூறியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசோ பட்டுக் கம்பளம் விரித்து யாத்திரையை வரவேற்பது போல, 144 தடை உத்தரவு போட்டு ரத யாத்திரைக்குப் பாதுகாப்பு கொடுத்து, எதிர்ப்பாளர்களைக் கைது செய்யும் கீழ்த்தரமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

​செங்கோட்டைக்குள் ரத யாத்திரை நுழையும் நாளில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை தகர்க்கப்பட்டிருப்பது திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. தந்தை பெரியார் சிலையின் தலையைத் தகர்த்த முண்டங்கள் மீது அதிமுக அரசு உறுதியான - கடுமையான நடவடிக்கையை கால தாமதமின்றி எடுக்க வேண்டும்.

உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வதுடன், இத்தகைய வன்முறைச் செயல்களைத் தூண்டிவிடும் கூட்டத்தையும் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும். அதனை வலியுறுத்தி, திமுக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகிவிட்டது.

​தமிழ்நாட்டில் உள்ள பெரியார் சிலைகள் அனைத்துக்கும் உரிய பாதுகாப்பினை ஆட்சியாளர்கள் வழங்கிட வேண்டும். இல்லையென்றால், தந்தை பெரியாரால் மானமும், அறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் பெற்ற திமுக தொண்டர்கள் ஓயாமல் - உறங்காமல் பெரியாரின் சிலைகளுக்குப் பாதுகாப்பினை வழங்குவார்கள்.

பெரியார் சிலை மீது கை வைக்க நினைக்கும் கோழைகளை விரட்டி அடிப்பார்கள். அந்தக் கோழைகளைத் தூண்டிவிடும் மதவெறி சக்திகளை தமிழ்நாட்டை விட்டே துரத்தியடிப்பார்கள் என எச்சரிக்கிறேன்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x